வியாழன், 25 அக்டோபர், 2012

சாதி மறுப்பு திருமண ஜோடிக்குப் பாராட்டு!!


வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் அக்.24 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவாரூர் மாவட்ட மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் சாதி மறுப்புத்திருமணம் செய்து கொண்ட பாலமுருகன், ஆனந்தி ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.லாசர் சால்வை அணிவித்து கவுரவித்தார். 

பாலமுருகன் ஆலங்குடி கடைவீதியில் கடை வைத்திருக்கிறார். அந்தக் கடையில் பணியாற்றி வந்த ஆனந்தி என்ற பெண்ணும் இவரும் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர். ஆனந்தி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களது காதல் குறித்து அறிந்த சாதி ஆதிக்க வெறியர்கள் பாலமுருகனை மிரட்டியுள்ளனர். இதை பொருட்படுத்தாமல் பாலமுருகன், ஆனந்தியை திருமணம் செய்திருக்கிறார்.

சாதி ஆதிக்க வெறியர்களின் மிரட்டல் காரணமாக இருவரும் தலைமறைவாயினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இவர்களைத் தொடர்பு கொண்டு, காவல்துறையில் புகார் கொடுக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் இவர்களைப் பாராட்டி கவுரவித்த ஏ.லாசர், சாதி மறுப்புத் திருமணங்கள் மூலம் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்றும், இந்தத் தம்பதியினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறையினர் முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக